முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலைக்குறித்து கேள்வி கேட்பதற்கு தி.மு.கவிற்கு தகுதி கிடையாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில், நளினியை மட்டும் விடுதலை செய்யலாம் என்றும் மற்றவர்களை விடுதலை செய்ய தேவையில்லை என்றும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்டது.
அமைச்சரவையில் கையெழுத்திட்ட பிறகு தற்போது கேள்வி கேட்பதற்கு தி.மு.கவிற்கு என்ன உரிமை உள்ளது” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலைக்குறித்து பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.