பலாலி விமான நிலையம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த திறப்பு விழாவையடுத்து, இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பலாலி விமான நிலையத்தில் கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கூட்டமொன்று அலரி மாளிகையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது விமான நிலைய கட்டுமானப் பணிகள் 30 வீதத்துக்கு மேல் நிறைவடைந்துள்ளதாகவும் மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் இணைப்புகள் இன்னும் பெறப்படவில்லை என்றும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
இந்த பிரச்சினையைத் தீர்க்க கடற்படையின் உதவியுடன் கடல் நீரைச் சுத்திகரித்துப் பயன்படுத்தலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்துள்ளார்.
இந்நிலையில், மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் இணைப்புகள் பெறப்பட்டதன் பின்னர், பலாலி விமானத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.