தமிழக எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில், சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரவு-செலவு திட்ட தாக்கலுக்குப் பின்னர், வரவு-செலவு திட்ட கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளதால், அதில் கூற வேண்டிய விடயங்கள் குறித்தும், நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுமென தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தி.மு.க.வைப் பொறுத்தவரை, பல நாடாளுமன்ற உறுப்பினர்களே மாவட்டச் செயலாளர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர். எனவே, இந்தக் கூட்டத்திலேயே அடுத்தடுத்த தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, தமிழக அரசு 2019-2020 ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை நாளை நாடாளுமன்றில் தாக்கல் செய்யவுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருப்பதனால், இந்த வரவு-செலவு திட்டத்தில் மக்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
இந்த விரிவான வரவு-செலவு திட்டத்தில் ஒவ்வொரு துறைக்குமான அறிவிப்புகள் வெளிவரவுள்ளன.
வரவு-செலவு திட்டத்தை தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.